இருளர்கள் என்றாலே திருடர்களா?
பொய்வழக்குச் சர்ச்சையில் விருத்தாச்சலம் காவல் நிலையம்... கொதிக்கும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்...
நாடோடிப் பழங்குடிகளான இருளர் சமூகத்தினர்மீது, பொய் வழக்குகளைக் காவல்துறை திணிக்கும்விதத்தையும், அவர்கள்மீது தொடுக்கப்படும் அத்துமீறல்களையும் வன்முறையையும் மையமாகவைத்து சமீபத்தில் வெளியான திரைப்படம் `ஜெய் பீம்.’ இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய அந்தப் படம், கடலூர் மாவட்டம், கம்மாபுரம் காவல் நிலையத்தில் 1993-ம் ஆண்டு நடைபெற்ற லாக்கப் மரணத்தை மையமாகவைத்து எடுக்கப்பட்டது. தற்போது அதே போன்ற பொய் வழக்குப் புகாரில் சிக்கியிருக்கிறது விருத்தாசலம் காவல் நிலையம்!
கடந்த 26.12.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை இருளர் குடியிருப்பைச் சேர்ந்த அஜீத் என்ற இளைஞரைக் கைதுசெய்த விருத்தாசலம் காவல்துறையினர், அவர்மீது கடைகளை உடைத்து பணத்தைத் திருடியதாக நான்கு திருட்டு வழக்குகளைப் பதிவுசெய்தனர். அதன் பிறகு ஜாமீனில் வெளிவந்த அஜீத், ‘தனது பணத்தைப் பறித்துக்கொண்டதுடன், பொய் வழக்கு போட்டுச் சிறையிலும் அடைத்த போலீஸார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்குப் புகார் அனுப்பியிருக்கிறார்.