லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு பின்னணி... ரூ.600 கோடி சொத்து குவித்தாரா அன்பழகன்?
நெடுஞ்சாலையை கிராமத்துடன் இணைக்கும் குறுகிய பாதையில் சென்றால் பிரமாண்டமாக வரவேற்கிறது, கே.பி.அன்பழகனின் பங்களா.
ஊழல் புகாரில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களை வரிசைகட்டி ரெய்டு நடத்திவருகிறது தி.மு.க அரசு. எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, தங்கமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரைத் தொடர்ந்து ஆறாவது நபராக தருமபுரி மாவட்டத்தில் கோலோச்சும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகனை வளைத்திருக்கிறது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை.
அ.தி.மு.க ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த கே.பி.அன்பழகன், பாலக்கோடு தொகுதியில் தொடர்ந்து ஐந்தாவது முறையாக வெற்றிபெற்று எம்.எல்.ஏ-வாக இருக்கிறார். அமைதியான பாணியில் அரசியல் செய்தாலும், தருமபுரி மாவட்டத்தில் அ.தி.மு.க-வை வலுவாகக் கட்டமைத்து வைத்திருக்கிறார். அதனாலேயே, தி.மு.க தனிப்பெரும்பான்மையாக ஆட்சியில் அமர்ந்தாலும், அந்தக் கட்சியால் தருமபுரி மாவட்டத்திலுள்ள ஐந்து தொகுதிகளில் ஒன்றில்கூட வெற்றிபெற முடியவில்லை. அ.தி.மு.க மூன்று தொகுதிகளையும், அதன் கூட்டணியிலிருந்த பா.ம.க இரண்டு தொகுதிகளையும் மொத்தமாக அள்ளின. இதற்கு அன்பழகனின் தேர்தல் யுக்தியே காரணம் என்று கூறப்பட்ட நிலையில்தான், தற்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அன்பழகன் அமைச்சராக இருந்தபோது எழுந்த ஊழல் புகாரைத் தூசுதட்டியிருக்கிறது.